அக்காலத்தில் பெண் குழந்தைகள் வயதுக்கு வந்துவிட்டால் கர்ப்பப்பை பலம் பெறுவதற்காக உழுத்தங்களி கொடுப்பது வழக்கமாக இருந்தது. அது மட்டுமின்றி வயது வந்த உடனேயே முட்டையையும், நல்லெண்ணெயையும் தினமும் வெறும் வயிற்றில் குடிக்கச் செய்வர்.
இந்தக் களியில் வெல்லம், உளுந்து, நல்லெண்ணெய் சேருவதால் இரும்புச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து தாதுக்கள் என்று எல்லாம் கிடைத்து கர்ப்பப் பை பலமாக அமையும்.
உழுத்தங்களி செய்வது எப்படி?
அரை கப் உழுந்தை வாணலியில் வறுத்து அதோடு அரை கப் அரிசி சேர்த்து மாவாகத் திரித்து சலித்துக்கொள்ளவும். 2 கப் உடைத்த கருப்பட்டி வெல்லத்தோடு தண்ணீர் 2 கப் விட்டு சூடாக்கவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி அழுக்கு, மண்நீக்கி, வாணலியைக் கழுவி மறுபடியும் அதிலேயே வெல்லக் கரைசலை ஊற்றவும்.அதோடு 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துச் சூடாக்கவும்.
கரைசல் கொதிக்கும்போது மாவை மத்தியில் கொட்டிக் கிளறி, ஒரு கரண்டியை அதில் குத்தி மூடி வைக்கவும். குறைந்த தணலில் 7-லிருந்து 10-நிமிடங்கள் வரை வேக விடவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கி நன்றாகக் கிளறிவிடவும். சிறிது ஆறியதும் 2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு கலந்து உருண்டைகளாக உருட்டி சாப்பிடக் கொடுக்கவும்.
சூப் குடியுங்கள்:-
கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு கப் சூப் பகலிலும், இரவிலும் குடித்தால் மலச்சிக்கல் இல்லாமல், அஜீரணம் இல்லாமல் உண்ட உணவு நன்கு செரித்து ஆரோக்கியமாக இருக்க இயலும்.
பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு சாலட் அல்லது தயிர்ப் பச்சடி சேர்த்துக் கொள்ளவும். விருப்பப்பட்டால் 11 மணிக்கு உண்ணலாம். காய்கறிகள், பழங்கள் விதவிதமாக உண்ணவும். உதாரணத்திற்கு காலை டிபனுடன் 2 துண்டு கொய்யா, ஓர் ஆரஞ்சு சாத்துக்குடி உண்ணலாம். மதிய உணவுடன் வாழைப்பழம், மாலையில் ஆப்பிள்... காய்கறிகளைப் பொரியலாகச் செய்யும்போது ஒரே வகை காய்க்குப் பதிலாக இரண்டு அல்லது மூன்று வகை காய்களைச் சேர்த்துச் செய்யலாம்.
முடிந்தவரை 3 வகை பழங்கள், 4 வகை காய்கறிகள், தினமொரு கீரை என்று கிடைக்குமாறு உணவில் மாற்றங்கள் செய்யவும்.
பால், தயிர் குறிப்பிட்டபடி அளவு தவறாமல் உண்ணவும். பாதாம், கிஸ்மிஸ், பேரீச்சை போன்றவை உங்கள் பட்ஜெட்டில் முடியுமானால் சேர்க்கலாம். ஆனால் கீரை சேர்த்துக் கொண்டாலே இரும்புச்சத்து கிடைத்துவிடும்.
முழு தானியங்கள், பயறு, பருப்பு வகைகள் கலந்த டிபனாகத் தயாரிக்கலாம். அடை, தோசை, விதவிதமான இட்லியுடன் பலவகை சட்னி, சாம்பார் போன்றவை. சோயாவில் முழுப் புரதம் உள்ளதால் தங்களுக்குப் பிடித்தமானபடி சிறிதளவு ஏதாவது ஒரு உணவுடன் சேர்க்கவும். (சைவமாக உள்ளவர்கள் முக்கியமாக இதைக் கடைப்பிடிக்கவும்)
உப்பு, ஊறுகாய், காரத்தைக் குறைக்கவும். ஃப்ரஷ் பழங்கள், காய்கறி ஜுஸ் சாப்பிடலாம். ஓரளவு நன்றாகக் குனிந்து, நிமிர்ந்து வேலை செய்யவும். நன்றாக நடக்கவும். இதனால் பலவித பிரச்னைகளைத் தவிர்க்க இயலும். வீண் வாக்குவாதங்கள், விவாதங்கள் தவிர்த்து நேரம் கிடக்கும்போது நல்ல பாட்டுக்கள், ஸ்லோகங்கள் கேட்கலாம். மனது நிம்மதியுடன் இருந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.